அன்புள்ள திரு. கமலஹாசன் அவர்களுக்கு,
தசாவதாரம் மூலம் என்ன செய்ய/சொல்ல நினைத்தீர்கள்? நான் உலக நாயகன், (முதலீட்டாளர்) கிடைத்தால், உலகளாவிய பொருட்செலவில் என்னால் படமெடுக்க முடியும் என்றா? மசாலாவில் தங்களுடைய சக நடிகருக்கு சற்றும் இளைதவனில்லை என்று காட்டவா? குருவை மிஞ்சிய சிஷ்யன் என்று நிரூபிக்கவா? ”எல்லாமே நானாய், நானே எல்லாமுமாய்” விஸ்வரூபம் எடுக்க எண்ணமோ? தமிழ் திரையுலகை ஹாலிவுட் தரத்துக்கு எடுத்துச் செல்வேன் என்று தங்களுக்கு தாங்களே செய்து கொண்ட சபதமோ? ”நான் தொழில் நுட்ப வல்லுனன், காட்டுகிறேன் பார் என்னுடைய தொழில் நுட்பத் திறமைகளை” என்ற எண்ணமோ? புது சினிமாவை நோக்கி தமிழ் சினிமாவை வீறு நடை நடத்திச் செல்லவோ? தங்களது பகுத்தறிவு கருத்துக்களை பரப்பவோ? எதுவாக இருந்தாலும், தசாவதாரம், தங்களது ரசிகனான எனக்கு ஏமாற்றத்தைத்தான் தந்தது.
இது ஒரு சிறந்த தொழில் நுட்ப படம் என்றும், ஹாலிவுட் தரத்திற்கு தொழில் நுட்பம் பயன் படுத்தப் பட்டிருக்கிறது என்று சொல்லப்பட்டது. நீங்களே இதை ஒத்துக் கொள்ள மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். முதலில் ஒப்பனையை எடுத்துக் கொள்வோம். சிறந்த ஒப்பனை என்று எதை கூறுவீர்கள்? என்னைக் கேட்டால், ஒப்பனை என்று ஒன்று இருக்கிறது கண்டு பிடிக்க முடியாவிட்டால், அதுவே சிறந்த ஒப்பனை. ஒப்பனை அற்ற கதாபாத்திரங்கள் இரண்டு என்று கொண்டால் (நம்பி, கோவிந்த்), மற்ற எட்டு கதாபாத்திரங்களில் நான்கு கதாபாத்திரங்களின் (கிருஷ்ணவேனி, புஷ், ஃப்ளெட்சர், கலிபுல்லா) ஒப்பனை மிக மோசமாக இருக்கிறது. குறைந்த விலை முகத்திரைகளை (mask) மாட்டிக்கொண்டது போல் இருக்கிறது. குறிப்பாக, புஷ்சின் ஒப்பனை எனக்கு Point Break என்ற ஆங்கில படத்தை நினைவூட்டியது. ஏன், என்ன ஆயிற்று உங்களுக்கு. பல வருடங்களுக்கு முன் அவ்வை சண்முகியில் இதை விட சிறப்பாக செய்திருந்தீர்களே? இம்முறை வெஸ்ட்மோர் ஒப்பனை செய்யும் போது சற்று கண்ணய்ர்ந்து விட்டீர்களா? தாங்கள் உலக சினிமா ரசிகர் என்று தெரியும். கண்டிப்பாக La Vie En Rose பார்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
Point Breakல் ஹாலோவீன் முகத்திரைகள்
La Vi En Roseல் ஒப்பனை
அடுத்தாக காட்சி அமைப்பிற்கு வருவோம். நம்பியையும் கோவிந்தராஜரையும் கடலில் சென்று போடும் காட்சி. படகுகள் நதியில் சென்று கடலை அடையும். தொழில் நுட்பத்தால் சிறப்பாக செய்ய நினைத்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். தவறவிட்டு விட்டீர்கள். பள்ளிகளில் நாடகம் நடத்தும் போது கடல் காட்சி இருந்தால் நீல நிற புடவையை ஆட்டி கடல் உணர்வை ஏற்படுத்துவார்கள். அதுபோல் இருந்தது. சுனாமியும் மிகச் செயற்கையாக தெரிந்தது.
கீழே உள்ள பாட்டில் 3.20 நிமிடத்துக் காட்சியைப் பார்க்கவும்:
அடுத்தது கதைக்கு வருவோம். ஒரு வரிக் கதை – அழிவுப் பொருளை காக்கும் விஞ்ஞானியை துரத்தும் வில்லன். ஒரு வரிக் கதை தவறில்லை. அதை விறு விறுப்பாக எடுத்துச் சென்றிருக்கீர்களா என்று என்னைக் கேட்டால், இல்லை என்றுதான் சொல்லுவேன். Slickness என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்களே, அது இல்லை உங்கள் படத்தில். ஜவ்வு போல் இழுத்துக் கொண்டு போகிறது. தங்களது பல திரைப்படங்களில் இது ஒரு பெரும் குறையாகவே இருக்கிறது. ஏன் உங்களுக்கு சரியான எடிட்டர் கிடைப்பதில்லையா? அல்லது, நிறைய படம் பிடித்து விட்டு எதை எடுப்பது, எதை விடுப்பது என்ற குழப்பமா?
”போதும் நிறுத்து, முழு நீள மசாலா தான் எனது நோக்கம்” என்கிறீர்களா? சரி, மசாலாவிற்கு வருவோம். மசாலாவின் பிராதான அம்சமாக சண்டையை எடுத்துக் கொள்ளலாமா? சண்டைகளாகட்டும், கார் துரத்தலாகட்டும் ஒன்றும் சொல்லிக் கொள்ளும் படி இல்லை.
அடுத்தது நடிப்பிற்கு வருவோம். உங்கள் நடிப்பை பற்றி சொல்லியா தெரிய வேண்டும்? இருந்தாலும் பார்ப்போம். நம்பியாக சில நிமிடங்களே வந்தாலும் மனதில் நிற்கிறீர்கள். புஷ்ஷும், ஃப்ளெட்சரும் வெறும் அங்க சேஷ்டைகள். கலிஃபுல்லாவாக என்ன செய்தீர்கள் என்று தெரியவில்லை. கிருஷ்ணவேனியாக கொஞ்சம் மிகை நடிப்பு (அவ்வை சண்முகி மாமி நூறு மடங்கு மேல்), ஜப்பானியராக ஒன்றும் பெரிதாக நடிக்கவில்லை. கோவிந்தாக ஒடிக்கொண்டே ஏதோ செய்திருக்கிறீர்கள், பரவாயில்லை. புஷ்பவராகனாக மாறியிருக்கிறீகள். பல்ராம் நாயுடுவாக வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறீர்கள். அவ்தார் சிங்காக அசத்தியிருக்கிறீர்கள். ஆக மொத்தம் நடிப்பில் நாற்பத்தைந்து விழுக்காடு வாங்கியிருக்கிறீர்கள். நூற்றுக்கு நூற்றைம்பது விழுக்காடு வாங்குபவரல்லவா நீங்கள், நாற்பதைந்து என்பது மிகக் குறைந்த மதிப்பெண் அல்லவோ? ஏன், எல்லாவற்றையும் நீங்களே செய்ய நினைத்ததால் உண்டான களைப்போ? நடிப்பை விட்டு அடுத்த தலைப்பிற்கு செல்லும் முன், மறுபடியும் ஒன்றை வலியுறுத்திச் சொல்லி ஆக வேண்டும். நகைச்சுவை தங்களுக்கு கை வந்த கலை. பல்ராம் நாயுடுவாக மிகச் சிறப்பாக செய்திருக்கிறீர்கள். பாத்திர அமைப்பு, ஒப்பனை, நடிப்பு எல்லாமே மிகச் சிறப்பாக அமைந்திருக்கின்றன.
அடுத்து, கருத்துக்கு வருவோம். Butterfly Effect / Chaos Theory என்று விஞ்ஞான கருத்துக்களை கூறுகிறீர்கள். வரவேற்கத்தக்கது. பூவராகனாக மண் சுரண்டுதலுக்கு எதிராக, ஜாதி வெறிக்கு எதிராக் குரலெழுப்பியிருக்கிறீகள். நல்ல கருத்துக்கள். எப்போதும் போல் நாத்திகக் கருத்துக்களை கூறியிருக்கிறீர்கள். நிறைய இடங்களில் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டது போல் தோற்றம் அளிக்கிறது. நீங்கள் இப்படத்தில் வள வளவென்று சொல்லும் கருத்துக்களை விட, அன்பே சிவத்தில் சொல்லும் “ஏன்னா நானும் கடவுள்” பல மடங்கு சிறந்து விளங்குகிறது. நீங்கள் பகுத்தறிவாளர் என்பது எல்லோருக்கும் தெரியும். நானும் உங்கள் கட்சியே. ஆனால், பலரால் வணங்கப்படும் ஒரு குறியீடை, அங்கிங்கென்று அலைக்கழித்து பலர் மனதைப் புண்படுத்தியிருக்கிறீர்கள். தேவையா?
சினிமா என்பது ஒரு கூட்டு முயற்சி. எல்லோரும் சேர்ந்து இழுக்கும் தேர். எல்லாரும் அவரவர் பங்கை நன்றாகச் செய்தால்தான் ஒரு நல்ல சினிமா உருவாக முடியும். நாகேஷ், வையாபுரி, கே.ஆர். விஜயா, எம்.எஸ். பாஸ்கர் போன்ற திறமையான நடிகர்களைக் கொண்டிருந்தாலும், அவர்கள் திறமைக்கு நீங்கள் வாய்ப்பளிக்கவில்லை. படம் முழுதும் நீங்களே ஆக்கிரமிக்க வேண்டும் என்பது உங்கள் எண்ணமா?
மிகுந்த எதிர்பார்ப்புடன் சென்றேன். அதனாலோ என்னவோ ஏமாற்றத்துடன் திரும்பி வந்தேன்.
இதற்கு ப்ராயச்சித்தமாக வேறு ஒரு நல்ல படத்தை தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன் விடைபெறுகிறேன்.
அன்புடன்,
மாது.



5 responses so far ↓
bsubra // June 23, 2008 at 5:50 am |
hmmm… good one
Anand // June 23, 2008 at 6:01 am |
“தசாவதாரம் மூலம் என்ன செய்ய/சொல்ல நினைத்தீர்கள்?”
— நீங்கள் குறிப்பிட்ட எல்லாவற்றையும் செய்ய/சொல்ல நினைத்திருக்கிறார் கமல். அதனால் தான் எதையுமே சரியாக சொல்லவில்லை. the sad thing though, is that, இவை எல்லாவற்றையுமே, தனித்தனியாக இதற்கு முன்னாடியே செய்துவிட்டார், (உதாரணத்துக்கு, எனக்கு தெரிந்த முதல் ஹாலிவுட் தரத் தமிழ் படம்: விக்ரம்)
Dasavatharam, தசாவதாரம்: FAQ - வழக்கமாக கேட்கப்படும் கேள்விகள் « Snap Judgment // June 23, 2008 at 7:04 pm |
[...] உணர்வை ஏற்படுத்துவார்கள்‘ என்று மாதவன் சொல்வது போல்; சீரீயஸ் காட்சிகளில் கமல் அழுது [...]
கீர்த்திவாசன் // June 23, 2008 at 10:10 pm |
அப்பா ! குறை சொல்ல எத்தனை விஷயங்கள் இருக்கிறது !! அபாரம். படத்தில் எனக்குப் பிடித்த ஒரு விஷயமும் அதுதான். ஒரு கமல் ரசிகனாக என்னை அறிந்தவர்கள் அனைவரும் பல விவாதங்கள் புரிந்தார்கள். அனைவரும் உன்னித்து கவனிக்கிறார்கள். மகிழ்ச்சிதான்.
நிறைய பென்ச்மார்க் வைத்து தசாவதாரம் பார்த்திருக்கிறீர்கள். உங்களைப் போலவே தசாவதாரம் படம் பார்த்துவிட்டு பலரும் இதைத்தான் செய்திருக்கிறார்கள்.
ஹாலிவுட் தரம் என்றால் என்ன ? படத்தின் எந்த அம்சம் ஹாலிவுட் தரத்தில் இல்லை ? Cinematography ? Screenplay ? Editing ? Acting ? கொஞ்சம் விளக்கவும்.
ஒரு சினிமாவில் இருந்து உங்கள் எதிர்பார்ப்பு என்ன என்பதையும் கொஞ்சம் விளக்கவும். ஏனென்றால், ஒரு பத்து கதாபாத்திரங்களை ஒருவரே செய்ய முனைந்த ஒரு முயற்சி – ஒரு experiment – இதில் கமலஹாசன்தான் புறையோடி இருந்தாக வேண்டும். எம்.எஸ் பாஸ்கர், ரகுராம் போன்றவர்களது கேரக்டர்கள் வெகுவாகப் பேசப்படுகின்றன. இவற்றுள் மற்ற கேரக்டர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்ற வாதம் வினோதமாக இருக்கிறது. எதற்காக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் ? திரைக்கதையில் அவர்களுக்கு அவ்வளவுதான் ஸ்கோப் எனும்போது அவர்களது டீட்டெய்ல் படத்தின் வேகத்தை பாதித்திருக்கும்.
“எப்போதும் போல் நாத்திகக் கருத்துக்களை கூறியிருக்கிறீர்கள்” ? நாத்திகம் என்றால் கடவுள் இல்லை என்றல்லவா பொருள்.. அப்படிப்பட்ட கருத்து எங்கே வருகின்றது ? வருவதாக உங்களுக்குத் தோற்றம் அளிக்கின்றது. அவ்வளவே ! There is no such explicit atheism in the movie. I’d be glad if you could point out such dialogues. Non-existance of God ல் நம்பிக்கை உள்ளவர்கள் தான் நாத்திகர்கள். பெருமாள் முக்கியம் இல்லை.. மனுஷங்கதான் முக்கியம் என்பது போன்ற கருத்துக்கள் நாத்திகம் ஆகாது. Please do not confuse on them.
“ஜவ்வு போல் இழுத்துக் கொண்டு போகிறது”. இது தங்கள் பதிவில் மட்டுமே நான் பார்த்த கருத்து. எனக்கு படம் விறுவிறுப்பாகவே இருந்தது. மூன்று முறைகளும்
.
“பலரால் வணங்கப்படும் ஒரு குறியீடை, அங்கிங்கென்று அலைக்கழித்து பலர் மனதைப் புண்படுத்தியிருக்கிறீர்கள்”. என் மனம் புண்படவில்லை. இன்ஃபாக்ட் கோவிந்தராஜன் மூலவர் மற்றும் உற்சவர் இருவரின் வித்தியாசமான பயணங்களாகவே படம் பின்னப்பட்டிருக்கிறது. இந்தியா வரும் வயலை உற்சவர் கோவிந்தராஜன் வாங்கிக்கொண்டு, கடல் வரை கொண்டு சேர்த்து மூலவர் கோவிந்தராஜன் அதை உள்வாங்கிக்கொண்டு கரை வந்து சேர்கிறார். படம் வெளிவருவதற்கு முன் “ஆஹா ! இந்துக்களின் மனதைப் புண்படுத்துவதாக தோற்றம் அளிக்கிறது.. போடு ஒரு கேஸை..” என்று குரலிட்ட ஒருவரும், படம் பார்த்துவிட்டு இன்று வரை கேஸ் போடவில்லை. So, I guess it hasnt.
“பலர் மனதைப் புண்படுத்தியிருக்கிறீர்கள்” – யார் யார் ?
“தசாவதாரம் மூலம் என்ன செய்ய நினைத்தீர்கள்?” – விடை – பணம். வந்துகொண்டிருக்கிறது. சீரிய வேகத்தில்.
மாது // June 24, 2008 at 4:52 pm |
கீர்த்திவாசன்,
நான் கண்ட குறைகளை பட்டியலிட்டுள்ளேன். குறிப்பாக ஒப்பனைகள் பல ஒவ்வாததாக இருக்கின்றன். நல்ல ஒப்பனைக்கு ஒரு உதாரணம் கொடுத்திருக்கிறேன்.
“இருந்தா நல்லா இருக்குன்னுதான் சொல்றேன்” என்பதை நல்ல வசனமாக, நாத்திகமாக காண்கிறேன்.
நான் கடவுள் நம்மிக்கையற்றவன்தான். ஆனால் என்னுடைய சக நண்பர்கள் (கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள்), மிதவாதிகள் கேட்ட கேள்வி – ”மற்ற மதக் கடவுள்களையோ, புனிதப் புத்தகங்களையோ கமல் தெருத் தெருவாக இழுத்துக் கொண்டு சென்று, அவைகளுக்கு தரவேண்டிய மரியாதையை தராமல் இருந்திருப்பாரா?” – எனக்கு பதில் தெரியவில்லை.
“இன்ஃபாக்ட் கோவிந்தராஜன் மூலவர் மற்றும் உற்சவர் இருவரின் வித்தியாசமான பயணங்களாகவே படம் பின்னப்பட்டிருக்கிறது” – என்ற உங்களது வித்தியாசமான பார்வை பிடித்திருந்தது.
ஒரு நல்ல கலைப் படைப்பு, பார்வையாளர்களை சிந்திக்கவைத்து, கேள்விகள் கேட்க வைக்கும். இது இரு காரணங்களால் இங்கு சாத்தியமாகின்றது. ஒன்று கமலிடம் மற்றவர்கள் கொண்ட எதிர்பார்ப்பு/நம்பிக்கை. மற்றொன்று படத்திலேயே வைக்கப்பட்டிருக்கும் பொறிகள். அந்த வகையில் பார்க்கும் போது, தசாவதாரம் நிறைய கருத்துக்களை வெளிக் கொண்டுவந்திருக்கிறது.
மற்றொரு வலைப்பதிவாளர், மிக விரிவாக எழுதியிருக்கிறார்:
http://nizhalkal.blogspot.com/2008/06/blog-post_16.html